அரகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் இப்போது வெட்கமின்றி அதன் கௌரவத்தையும் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், “டை, கோட் அணிந்து வந்தாலும் இவர்கள் புள்ளிகள் மாறாத புலிகளே” என சாடினார்.
மேலும், “காலை வேளையில் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தின் கௌரவம், சட்டம் குறித்து பேசினார். ஆனால் அரகலய காலத்தில் இவர்களே பாராளுமன்றத்தை முடிக்க வேண்டும் என்று கூறினர். எரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் இப்போது கௌரவத்தை காக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்” என அவர் நினைவுபடுத்தினார்.
“இப்போது இவர்கள் இறந்து பிறந்தவர்கள் போன்று கதைக்கின்றனர்” என்றும் அவர் விமர்சித்தார்.
அதேவேளை, நேபாளம் போன்ற நிலை ஏற்படாமல் நாடு காக்கப்படும் வகையில் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஜே.வி.பியினர் சத்தம் போடுவதை கண்டுகொள்ளப்போவதில்லை. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதியில் இறங்கிப் போராட முடியாத நிலை உருவாகும்” எனவும் சமிந்த விஜேசிறி எச்சரித்தார்.


