வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பின்னர், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை விதித்தார்.
டிரம்ப்பின் இந்த வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க்க நகர வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிரம்பின் இந்த உத்தரவுகள் அதிகார வரம்பு மீறியவை என விமர்சித்து அவற்றை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள டிரம்ப், “நமது நாடு முற்றிலுமாக அழிந்துவிடும், நமது இராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “பொருட்களின் விலைகள் மிகவும் குறைந்துவிட்டன, பணவீக்கம் இல்லை. எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிடமிருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களைக் கொண்டுவரும் வரிகள், அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் ஆக்குகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


