களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை – மொரகஹஹேன வீதியின், கனன்வில விகாரைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கனன்வில விகாரைக்கு அருகிலுள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக இழுத்துச் செல்லப்பட்டு, எதிரே வந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் உடனடியாக ஹொரணை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த தில்ஷான் மதுசர செனவிரத்ன (வயது 25) மற்றும் உதீஷ சித்மின (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதியை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை ஹொரணை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


