பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையின் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் மகளிர் மருத்துவப் பிரிவில், குழந்தைகளுக்கான பராமரிப்பு அறை அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அங்கு 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஏசி இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அறை முழுவதும் தீப்பிடித்து புகை சூழ்ந்துள்ளது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்த குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குழந்தைகள் இருந்த அறை, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்டு, தொடர்ந்து குளிர்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


