Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீதிபதி இடமாற்ற விவகாரம்: வடக்கு ஆளுநர் செயலகம் விளக்கம்

நீதிபதி இடமாற்ற விவகாரம்: வடக்கு ஆளுநர் செயலகம் விளக்கம்

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது

நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா கடந்த 22.04.2026 அன்றுதான் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

அவர் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள், மே 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எவ்வித நியாயமான காரணங்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

இதனால் இதற்குப் பின்னால் ஏதோவொரு வெளிப்புறத் தலையீடு இருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

சில பேராணை மனுக்களில் எதிர்மனுதாரராகக் குறிப்பிடப்பட்டிருந்த வட மாகாண ஆளுநருக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி சில இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார் (அவை பின்னர் ரத்துச் செய்யப்பட்டு, நீடிக்கப்படவில்லை).

இந்த உத்தரவுகள் காரணமாகவே இந்தத் திடீர் இடமாற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சங்கத்தின் உறுப்பினர்கள் நம்புகின்றனர்.

குறித்த ஆளுநர், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகப் பேசியோ இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரியிருந்ததாகத் தமக்கு நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments