தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியூங் பரிந்துரைத்த நீதியமைச்சர் பதவிக்கான வேட்பாளர் கிம் சியுங்-வொன், தனது நியமனத்தை திரும்பப் பெற்றுள்ளார். இந்த மாதத்தில் லீ அரசாங்கத்தின் அமைச்சரவைப் பதவிக்கான பரிந்துரையாளர் ஒருவர் விலகுவது இது இரண்டாவது முறையாகும்.
மருந்து பரிசோதனை ஒன்றை விரைவுபடுத்த கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கிம் சியுங்-வொன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை கிம் மறுத்துள்ளார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தாம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், தனது குறைபாடுகளை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், பாலின சமத்துவம் மற்றும் குடும்ப விவகார அமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட யோங் ஹியே-இன்னும் தனது நியமனத்தைத் திரும்பப் பெற்றிருந்தார். இந்நிலையில், லீ ஜே-மியூங்கின் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. Gallup Korea நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பில், லீயின் செயல்பாடுகளுக்கான பொதுமக்கள் ஆதரவு 37 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது அவர் 2025 ஜூன் மாதம் பதவியேற்ற பின்னர் பதிவான குறைந்தபட்ச அளவாகும்.
அமைச்சரவை வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அரசாங்கத்தின் நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதை லீ ஜே-மியூங் ஒப்புக்கொண்டுள்ளார். வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


