செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தி தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
பலாலி வீதி கடந்த வருடம் முதல் உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக பயணிக்கும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் தரித்து நிற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் வீதி திறந்து விடப்பட்டு வந்தது.
இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளையும், அதனைத் தொடர்ந்து தீர்த்த திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ஆலயத்திற்குச் செல்லும் காவடி பக்தர்கள் மற்றும் பாத யாத்திரையில் ஈடுபடுவோர் பலாலி வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடந்து செல்லவும், வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் ஆலய உற்சவங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இவ்வழியாகச் செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


