Wednesday, August 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தற்போது நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 84,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 மாவட்டங்களைச் சேர்ந்த 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 நபர்கள் இந்த வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 நபர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என கடமையிலுள்ள வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வினாடிக்கு 20 கனமீட்டர் நீர் குடா கங்கைக்கு திறந்து விடப்படுவதாக குக்குலே கங்கை நீர்மின் உற்பத்தி நிலைய நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments