சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் கைது செய்வதற்கு தேவையான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராவ் (Aarau) நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்த 24 முதல் 27 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த டெக்னோ (techno) இசை நிகழ்ச்சியில், இன்று அதிகாலை வரை ஆராவ் நகரில் உள்ள குதிரைப் பந்தயக் களத்தில் நடைபெற்ற போதே இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூரிச் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் நடந்த இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அடையாளம் அல்லது சாத்தியமான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


