மலேசியாவில் பள்ளி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன், சம்பவம் இடம்பெற்ற போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதையடுத்து குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மலேசியாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி, பந்தர் உத்தாமா பகுதியில் உள்ள எஸ்.எம்.கே. பண்டார் உத்தாமா தாமன்சாரா(SMK Bandar Utama Damansara) பாடசாலையின் கழிவறையில் 16 வயதான மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். அதே பாடசாலையில் கல்வி கற்ற 14 வயதான சிறுவனே இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனின் மனநிலை தொடர்பாக உளவியல் நிபுணர்களின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் தனது செயல்களின் தன்மையையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புத் தரப்பு வாதிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கொலைக்கான சட்டப்பூர்வ பொறுப்பை சிறுவன் ஏற்கும் நிலையில் இல்லை என நீதிமன்றம் தீர்மானித்து அவரை விடுதலை செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பு மலேசியாவில் சிறுவர் குற்றவியல் நீதி, மனநலப் பிரச்சினைகள் மற்றும் கடுமையான குற்றங்களில் சிறார்களின் சட்டப்பூர்வ பொறுப்பு தொடர்பான விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


