Wednesday, July 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற ஆவண முறைமை தெளிவுபடுத்தல்

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற ஆவண முறைமை தெளிவுபடுத்தல்

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற ஆவண முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டம் கொழும்பு SEMA கட்டிடத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் அரச சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகப் அரச சேவை டிஜிட்டல்மயமாக்கலைத் துரிதப்படுத்தி, காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையை (Paperless Customs Declaration Processing System) ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இவ்வாறான டிஜிட்டல் மாற்றங்கள் அத்தியாவசியமானவை என்று குறிப்பிட்டார். காகிதப் பயன்பாடற்ற சுங்க ஆவண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்க அனுமதி வழங்கும் செயற்பாடு மிகவும் செயற்திறனாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் மாறுவதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்குப் பாரிய வசதியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை இம்முறைமை மூலம் கண்டறிந்து கொள்வதால், எந்தவிதமான முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் பின்னணியில், டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதப் பயன்பாடற்ற முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் எவருக்கும் தொழில் இழப்பு ஏற்பட மாட்டாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்க அனுமதி முகவர்களின் (Customs Clearing Agents) தொழில்கள் பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

LankaSign டிஜிட்டல் கையொப்பமும் ASYCUDA கட்டமைப்பும் ஒன்றிணைக்கப்படுவதன் மூலம், அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் இணையம் வழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இந்த முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார். அந்த ஒத்துழைப்பு கிடைக்குமாயின், எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியிலிருந்து இந்த புதிய முறையை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ASYCUDA கட்டமைப்புடன் LankaSign டிஜிட்டல் கையொப்பத்தை ஒருங்கிணைத்து, காகிதமற்ற சுங்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறை, அதன் நன்மைகள் மற்றும் நடைமுறைப்படுத்தல் பற்றிய விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் (Q&A) அமர்வில், கலந்துகொண்ட பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவசியமான விளக்கங்களும் பதில்களும் வழங்கப்பட்டன.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் (RARMB) பணிப்பாளர் டப்ளியூ. எல். சி. திலகசிறி மற்றும் LankaSign நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் நாலக விஜேநாயக்க ஆகியோரும் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.

நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி டி. எச். எஸ். புல்லெபெரும, இலங்கை வர்த்தக சபையின் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார முகவர்கள் (AEOs), LankaSign நிறுவனத்தின் அதிகாரிகள், சுங்க அனுமதி முகவர்கள், வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவின் (RARMB) அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments