மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா,மாத்தளை, கண்டி, கம்பளை, ஹட்டன், கபரகலை, பன்விலை, வத்தேகம, பேராதனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதுடன் கொத்மலை காமினி தசாநாயக்கா அணைக்கட்டினை அண்டிய ஹரங்கல தொரகலை, திஸ்பனை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது
சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு மகாவலி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், கடுமையான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, கெலிஓயா, கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வூட்டி, தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களை பாதுகாப்பான மத்திய நிலையங்களுக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ கண்டி மாவட்ட செயலாளருக்குப் பதிலாக பிரதிப் பணிப்பாளர் ஐ.ஏ.கே.ரணவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழைநிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


