தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்போது, சந்தேகநபரின் எதிர்தரப்பினர் வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை வெலிசர சிறைச்சாலையில் அல்லாது வேறு சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை மிகவும் பாதுகாப்பான பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதற்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


