பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் வழக்கு விசாரணைக்கமைய, இன்னும் ஒரு மாதம் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன மனுவை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 12 அல்லது 13 ஆகிய திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.
இதன்போது, 22வது திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,”நாங்கள் 22வது திருத்தத்தை எதிர்க்கிறோம். ஒரேடியாக இந்த 22வது திருத்தத்திற்கு நாம் வாய்ப்பு அளித்துவிட்டால், அதற்குப் பிறகு அரசாங்கத்திற்குத் தேவையானவாறு இந்தத் திருத்தங்களை மாற்ற முடியும் என்று சொல்லக்கூடும்.
அதனால் நாங்கள் வழக்கறிஞர்களுடன் இருக்கிறோம், நான் பாராளுமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெளிவான கொள்கையுடனும் முதுகெலும்புடனும் பேசுவேன். அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் மக்கள் தீர்ப்பிற்கு, அதாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அப்படி இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு தயராக வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.” என கூறியுள்ளார்.


