Sunday, June 7, 2026
spot_img
Homeபொது செய்திகள்ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

சேலம் கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 29). எல்.ஐ.சி. முகவர். கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பல லட்சம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதற்காக வங்கிகள், நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் ஹரி கிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஹரி கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர். நேற்று காலை 8 மணி ஆகியும் கதவை திறக்கவில்லை. அவருடைய தந்தை கதவை தட்டி பார்த்துள்ளார். ஹரிகிருஷ்ணன் அறையில் இருந்து எந்த சத்தமும் இல்லை. இதில் சந்தேகம் அடைந்த ஹரி கிருஷ்ணனின் தந்தை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார்.

அங்கு மின்விசிறியில் ஹரிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கருப்பூர் போலீசார் ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments