‘தி பிளட் ஆஃப் டான்வாக்கர் (The Blood of Dawnwalker)’ என்ற அதிரடி ரோல்-பிளேயிங் வீடியோ கேம், வெளியான மூன்று நாட்களிலேயே 10 இலட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ‘தி விட்சர் 3 (The Witcher 3)’ விளையாட்டின் முன்னாள் இயக்குநர் கான்ராட் டொமாஷ்கேவிச் (Konrad Tomaszkiewicz) தலைமையிலான ரெபல் உல்வ்ஸ் (Rebel Wolves) நிறுவனத்தின் முதல் பெரிய கேமாக இது அமைந்துள்ளது.
இந்த விளையாட்டின் மேம்பாட்டுக்காக சீன தொழில்நுட்ப நிறுவனமான NetEase சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக Bloomberg அறிக்கையை மேற்கோள்காட்டி பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. NetEase, Rebel Wolves நிறுவனத்தில் 26 சதவீத பங்கையும் பெற்றுள்ளது. அதேவேளை, விளையாட்டின் வெளியீடு மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளை Bandai Namco மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 3ஆம் திகதி PC, பிளேஸ்டேஷன் 5 (PlayStation 5) மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்/எஸ் (Xbox Series X/S) தளங்களில் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு, 14ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டுள்ளது. கதையின் நாயகன் Koen, பகலில் மனிதனாகவும் இரவில் காட்டேரியாகவும் மாறக்கூடிய திறனைக் கொண்டுள்ளதுடன், தனது குடும்பத்தினரை மீட்பதற்காக குறைந்த காலத்துக்குள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் பிரதிகள் விற்பனையானது, ஒப்பீட்டளவில் குறைந்த மேம்பாட்டு செலவில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கேமாக ‘The Blood of Dawnwalker’ பெற்றுள்ள வரவேற்பை வெளிப்படுத்துவதாக கேமிங் துறை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனிடையே, இந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகத்திற்கான பணிகளையும் Rebel Wolves முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


