முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து இன்று வியாழக்கிழமை (24) தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் வசித்து வந்த தாயும் இரு பிள்ளைகளும் தங்களது வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்றைய தினம் காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் அங்கு சென்ற கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர்கள் 38 வயதான தாயும், 11 வயதான மகனும், 4 வயதான மகளும் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


