ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மன் விஜயம் சிறப்பான ஒரு விடயமாகும். அங்கு அவர் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்ததிலும் தவறில்லை. ஆனால் அவர்களுடன் ஏதேனும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்தாமலிருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனுக்கு விஜயம் செய்ததோ அல்லது அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்ததோ எவ்விதத்திலும் தவறல்ல.
ஆனால் அங்கு அவர்களுடன் ஏதேனும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தால் அது எவ்வகையானது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
கொழும்பு மக்களில் 60 சதவீதமானோர் தேசிய மக்கள் சக்தி அற்ற கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். அவ்வாறிருக்கையில் அந்த கட்சிகளுக்கு கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு இடமளிழப்பதல்லவா ஜனநாயகம்?
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமைக்கு மதிப்பளித்து 60 சதவீதம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்படுவார் என்று நம்புகின்றோம்.
அதே போன்று களுத்துறை மாநகரசபையிலும் நாம் ஆட்சியமைப்போம். உள்ளுராட்சிமன்றங்களில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பிளவுகள் இல்லை.
தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். முதலாவது அமர்வின் போது அனைவரும் இணைந்து வாக்கெடுப்பின் ஊடாகவே தலைவர், பிரதி தலைவரை தெரிவு செய்வர்.
அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முடியும். நாம் வெற்றி பெற்றுள்ள சபைகளில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை உதாசீனப்படுத்த மாட்டோம். அதேபோன்று அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள சபைகளில் எமது உறுப்பினர்களை உதாசீனப்படுத்தக் கூடாது.
மாநகர மேயர் அல்லது பிரதேசசபைத் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்களை பகிரங்கமாக நடத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
அந்த வகையில் கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பினையும் பகிரங்கமாகவே நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.