உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) முருகேசன் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் (7 பேர்) இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடினமான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றதாகும்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
முன்னதாக சம்பவம் நடந்த இடம் மிகவும் அணுக முடியாத மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது, அங்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டுக் குழுக்களால் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக இது அமைந்துள்ளது. முன்னதாக குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருந்தது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.