பிரதமர் நரேந்திர மோடி, இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி என்.ஆர். நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி ரூ.21 ஆயிரம் முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்க மக்களை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட போலியான வீடியோ. இதுபோன்ற மோசடிகளில் யாரும் ஏமாற வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.