யாழில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் வியாழக்கிழமை (12) இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி – தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆடுகள் திருடப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆடு திருட்டு தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்ற வாகனங்களின் இலக்கங்களை பெற்று, அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனமொன்று புத்தளம் மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாகனத்தை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் நெல்லியடி – துன்னாலை பகுதியில் வைத்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், திருடப்பட்ட 5 ஆடுகளை மீட்டதுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேக நபர்களை சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.