கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் முடக்குளத்தை சேர்ந்தவர் மோகனன் நாயர் மனைவி அம்பிகா (68 வயது). இவரது மகள் மாலினி (40 வயது). மாலினிக்கும் கேரளாவைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணமானது. இந்த நிலையில் அவா்களிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2020-ம் ஆண்டு கோர்ட்டு மூலம் விவாகரத்து ஆகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த உதயசிம்மன் என்பவரை மாலினி 2-வதாக திருமணம் செய்துள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவேதனை அடைந்த மாலினி தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து அம்பிகா மாலினியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக தனது மகன் மணிகண்டனிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் இரவு அம்பிகாவும், மாலினியும் அறை எடுத்து தங்கினர். பின்னர் அங்கு அவர்கள் வைத்திருந்த விஷத்தை (பூச்சிக்கொல்லி மருந்து) குளிர்பானத்தில் கலந்து குடித்தனர்.
பின்னர் உடல்நிலை மோசமாகவே இதுகுறித்து அம்பிகா, விடுதி ஊழியருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மாலினியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தாா்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.