தென்னாப்பிரிக்காவில் கடந்த சிலநாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. அங்குள்ள கிழக்கு மற்றும் மேற்கு கேப் மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சூரைக்காற்றுடன் கொட்டி வரும் மழை காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த சுமார் 1 லட்சம் வீடுகள் மின்சார வினியோகம் தடைப்பட்டு இருளில் மூழ்கின.
கிழக்கு கேப் மாகாணத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த மினி வேனை அப்பகுதியில் கரைபுரண்டு வந்த திடீர் வெள்ளம் அடித்து சென்றது. இந்த வேனில் 22 மாணவர்கள் இருந்தநிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. பள்ளி வேனுடன் மாயமான 19 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.