அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, தொடர்ந்து நாடுகடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும், அவற்றை டிரம்ப் கண்டுகொள்வதாய் இல்லை.
இந்த நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுகூறி, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டதற்கு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து, அப்பகுதியில் சுமார் 1,000 பேர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் மற்றும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
போராட்டத்தின் பதற்றம் அதிகரித்ததால், 2,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், டிரம்ப் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இதனிடையே, டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை, லாஸ் ஏஞ்சலீஸ் மக்களின் மீதான உள்நோக்க நடவடிக்கை என்று கலிஃபோர்னியா ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.