நடிகை ஷோபனா கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பது இல்லை என்றாலும் கூட எப்போதாவது செலெக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தொடரும் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் ஷோபனா. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடித்திருந்தார். இதனால் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள அவர் தொடர்ச்சியாக பல பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் தனது திரையுலக பயணத்தில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி அவர் பேசும்போது, பாலிவுட்டில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்தும், அதில் எப்படி அமிதாப்பச்சன் தனக்கு உதவி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அமிதாப்பச்சன் நடித்த ஹிந்தி படம் ஒன்றில் நான் ஒரு பாடலுக்கு கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தேன். அகமதாபாத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த பாடல் காட்சியில் நான் நிறைய உடைகளை அணிந்தபடி நடிக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமல்ல அன்று படப்பிடிப்பில் அமிதாப் பச்சனை பார்க்க சுற்றிலும் மக்கள் கூட்டம் வேறு அலைமோதியது. அதனால் படகுழுவினரிடம் எங்கே என் கேரவன் என கேட்டேன்.. அதற்கு படக்குழுவினரில் இருந்து ஒருவர், “அவர் மலையாள திரை உலகில் இருந்து வந்திருப்பவர் தான்.. எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.. அதனால் அந்த மரத்தின் பின் நின்று உடைமாற்றச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
ஆனால் அவர் இப்படி சொன்னதை அங்கே நின்றிருந்த தனது கேரவனில் அமர்ந்திருந்த அமிதாப்பச்சன் தன்னிடமிருந்த வாக்கி டாக்கியில் கேட்டு விட்டார். உடனடியாக கோபத்துடன் கேரவனை விட்டு வெளியே வந்த அவர், யார் அப்படி சொன்னது என்று கர்ஜித்தார், மொத்த படக்குழுவும் அப்படியே நடுங்கிப் போய்விட்டது. அதன்பிறகு அவர் தன்னுடைய கேரவனுக்கு சென்று என்னை உடைமாற்றுமாறு கூறிவிட்டு அவர் வெளியே ஓரமாக நாற்காலியை போட்டு அமர்ந்து விட்டார்.. இப்போது கல்கி படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது கூட, அப்போது பார்த்த அதே மனிதாபிமானம் இப்போதும் அமிதாப்பச்சனிடம் தொடர்கிறது” என்று சிலாகித்துக் கூறியுள்ளார் ஷோபனா.