சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் நித்யா என்ற நித்யஸ்ரீ (வயது 26). அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். வேலை அதிகமாக இருப்பதால் தினமும் அம்பத்தூர் சென்றுவர சிரமமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறிய நித்யா, இதற்காக அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கினார்.
இதற்கிடையில் ஓட்டல் மேலாண்மைக்கு படித்துவிட்டு வேலை தேடி வரும் கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் நித்யாவுக்கு காதல் மலர்ந்தது. கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 7-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே பாலமுருகனுடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் நித்யா வசித்து வந்தார்.
கடந்த 4-ந்தேதி மாலை தனது பெற்றோர் வீட்டுக்கு வருவதாக கூறி காதலன் பாலமுருகனை அவனது நண்பர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். மறுநாள் 5-ந்தேதி பாலமுருகன் வீட்டுக்கு வந்தபோது, நித்யா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் நிறைய மாத்திரைகள் கிடந்ததால் அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் வீட்டில் இருந்த 25 பவுன் நகையும் மாயமானதாக நித்யாவின் பெற்றோர் புகார் அளித்ததால் இந்த சந்தேக மரணம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் பெற்றோர் மற்றும் காதலன் பாலமுருகன் ஆகியோரிடம் விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்பேரில் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மற்றும் நித்யாவின் செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நித்யா உடன் கடைசியாக யார்? யார்? பேசினார்கள் என போலீசார் ஆய்வு செய்தபோது அவர் கடைசியாக சேலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(27) என்ற டாக்டரிடம் பேசியது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடைசியாக நித்யா வீட்டுக்கு வந்து சென்றதும் அவர்தான் என தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டாக்டர் சந்தோஷ்குமாரை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்தான், நித்யாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், டாக்டர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். போலீசாரிடம் டாக்டர் சந்தோஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
சேலத்தை சேர்ந்த நான், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது நித்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது.
இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். நாங்கள் சேர்ந்து இருக்கும்போது நித்யா எனக்கு தெரியாமல் அதை செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார். அவற்றை எனக்கு அனுப்பி, என்னை மிரட்டி பலமுறை பணமாகவும், எல்.இ.டி., டி.வி, பிரிட்ஜ், கட்டில், மேஜை என ரூ.8 லட்சத்துக்கும் மேல் பறித்துக்கொண்டார்.
முன்னதாக நித்யா, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கவுதம் என்பவரையும் காதலித்து உள்ளார். இதையறிந்த நான், நித்யாவுடனான தொடர்பை துண்டித்துவிட்டேன். தற்போது நான், யு.பி.எஸ். மேல் படிப்பு படித்து வருகிறேன். இதற்கிடையில் நித்யா, மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று மிரட்டி பணம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான், நித்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்காக நித்யாவை தொடர்பு கொண்டு, உன்னிடம் பேசி உல்லாசமாக இருக்க வேண்டும் என்றேன். அதன்படி 4-ந்தேதி இரவு நித்யா வீட்டுக்கு சென்றேன்.
அன்று இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார். அப்போது நித்தியாவிடம் நான் உனக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்து விடட்டுமா? என்று கேட்டேன்.இதற்கு சம்மதித்த நித்யா அரைகுறை ஆடையுடன் கட்டிலில் படுத்து இருந்தார். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்தேன் நித்யாவை படுக்கசொல்லி மசாஜ் செய்தேன். அப்போதும் போதையில் நித்யா கட்டிலில் படுத்துக்கொண்டே என்னை மிரட்டினார். இதனால் எனக்கு கோபம் தலைக்கேறியது. மது போதை மயக்கத்தில் கிடந்த நித்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றேன். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல் இருப்பதற்காக அவருக்கு அருகில் சில மாத்திரைகளை போட்டேன்.
பின்னர் நித்யா வீட்டில் லாக்கரில் இருந்த 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மறுநாள் காலை தப்பித்து சைதாப்பேட்டை சென்றேன். 25 பவுன் நகையை எனது நண்பரான முஜிபூர் பாஷாவிடம் கொடுத்து, பின்னர் வாங்கி கொள்வதாக கூறினேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முஜிபூர் பாஷாவிடம் கொடுத்து வைத்திருந்த 25 பவுன் நகையை மீட்ட போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ காலில் நிர்வாணம்…
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையான நித்யா பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலையான நித்யா, ஐ.டி. நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் தனது பெற்றோர் மற்றும் காதலனை ஏமாற்றி வந்துள்ளார். நித்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். அவர், பல வாலிபர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேசி, தன்னை அரை நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம், நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு கட்டணம் என நிர்ணயித்து பலரிடம் பணம் வசூலித்து உள்ளார்.
இதுபோல் பணம் கொடுப்பவர்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பறித்து சொகுசாக வாழ்ந்துள்ளார். அந்த பணத்தை பெற்றோருக்கும் மாதம் தோறும் கொடுத்துள்ளார். இதனால் தங்கள் மகள் ஐ.டி. கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குவதாக அவரது பெற்றோர் நினைத்துக்கொண்டனர்.
அப்படிதான் டாக்டர் சந்தோஷ்குமாரையும் காதல் வலையில் வீழ்த்தி பணம் மற்றும் பொருட்களாக பறித்து உள்ளார். அவர் தொடர்பை துண்டித்த பிறகுதான் பாலமுருகனை காதலிக்க தொடங்கி, அவருடன் ஒன்றாக வசித்து வந்தார். அவரிடமும் 5 பவுன் நகையை நித்யா பறித்துக்கொண்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் டாக்டரை மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் நித்யாவை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டுக்கு வருவதாக கூறினார். இதனால் தனக்கு பணம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் தனது பெற்றோர் வருவதாக கூறி காதலன் பாலமுருகனை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி வைத்து உள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திசைமாறி போன நித்யா, கடைசியில் தனது உயிரையும் இழந்துவிட்டார்.
நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அவருக்கு மேலும் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கொலையுண்ட நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோலீசார் அதிர்ச்சியில் மூழ்கிபோய்கிடக்கிறார்கள். அவரது செல்போனில் வாலிபர்கள் பலரது தொடர்பு எண்கள் இருந்தன. அவர்களையெல்லாம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டபோதுதான் டாக்டர் சந்தோஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் நித்யாவுடன் தொடர்பில் இருந்த வாலிபர்கள் எங்கே தங்களிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்களோ? என்கிற எண்ணத்தில் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சந்தோஷ்குமாரை கைது செய்தபோலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இளம்பெண் கொலை வழக்கில் டாக்டர் சந்தோஷுக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.