கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி மரியஜோய் (67 வயது). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் சந்தோஷ்குமார் மனைவி சைனிமோள் (35 வயது). இவருக்கும் மாமியார் மரியஜோய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மருமகள் சைனிமோள், மாமியாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் கையால் முதுகில் தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த மரியஜோயை குடும்பத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து மரிய ஜோய் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சைனிமோள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.