தர்மபுரி கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மகள் மோனிகா (வயது 27). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார்.
நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு டாக்டர் மோனிகா அசைவற்ற நிலையில் கிடந்தார்.
அவரை இன்னொரு டாக்டர் பரிசோதித்த போது மோனிகா பரிதாபமாக இறந்து இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் டாக்டர் உடலை கண்டு கதறி அழுதனர். இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் கண்கலங் கினர். பின்னர் போலீசார் பெண் டாக்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இருந்தாலும் மோனிகா இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையில் மயக்க மருந்து பாட்டில்களும், ஊசிகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து பெண் டாக்டர், தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர், திருமண விவகாரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.