Friday, June 13, 2025
spot_img
Homeஉலக செய்திகள்ரஷியா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை

ரஷியா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், இரு நாடுகளையும் கடுமையாக சாடி இருந்தார். முன்னதாக அவர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக கடந்த மாதம் துருக்கியில் இரு நாடுகளும் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. இஸ்தான்புல்லில் நடந்த இந்த பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பும் தலா 1,000 போர்க்கைதிகளை விடுவித்தன. இதைத்தவிர குறிப்பிடத்தக்க எந்த பலனும் கிட்டவில்லை.

போர் நிறுத்தம் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித அறிகுறியும் தென்படாததால் சர்வதேச நாடுகள் பெரும் ஏமாற்றம் வெளியிட்டு இருந்தன.அதேநேரம் 2-வது சுற்று பேச்சுவார்த்தையை ஜூன் 2-ந்தேதி (ேநற்று) நடத்துவதற்கு இருதரப்பும் விருப்பம் தெரிவித்து இருந்தன. அதற்கான ஆயத்தப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு முந்தைய நாளில், அதாவது நேற்று முன்தினம் இரு தரப்பும் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றின. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவிலான அந்த தாக்குதலால் உலகமே அதிர்ந்தது.

அதாவது ரஷியாவுக்குள் பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு உள்ளே சென்று டிரோன்களால் அதன் விமானப்படை தளங்களை உக்ரைன் தாக்கியது. இதில் ரஷியாவின் 40-க்கு மேற்பட்ட போர் விமானங்கள் நாசமாகின. மறுபுறம் ரஷியாவும் 470-க்கு மேற்பட்ட டிரோன்களால் உக்ரைன் நகரங்களையும், ராணுவ முகாம்களையும் தாக்கியது. இதில் ராணுவ வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் நேற்றும் நீடித்தன. அந்தவகையில் உக்ரைனின் ஹெர்சன் பிராந்தியத்தில் ரஷிய படைகள் பீரங்கிகளால் தாக்கின. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர். மேலும் ஜபோரிசியா நகரில் நடத்திய ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர்.

இதைப்போல உக்ரைனும் ரஷியா மீது நேற்றும் டிரோன்களை வீசி தாக்கியது. இந்த கடுமையான போருக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் உக்ரைனின் நேற்று முந்தைய அதிரடியை தொடர்ந்து மிகப்பெரிய போருக்கு புதின் திட்டமிடுவதாக அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஒன்று கூறியிருந்தது.

ஆனாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பங்கேற்றன.ரஷியா சார்பில் அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழுவும், உக்ரைன் தரப்பில் ராணுவ மந்திரி ரஸ்டம் உமரோவ் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இஸ்தான்புல் நகரில் உள்ள சிரகன் மாளிகையில் துருக்கியின் வெளியுறவு மந்திரி ஹகன் பிடன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. வெறும் 1 மணி நேரமே நடந்த இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பும் சில ஆவணங்களை பரிமாறிக்கொண்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்னர் தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக போர்க்கைதிகள் விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. நிபந்தனையில்லா போர் நிறுத்த ஒப்பந்ந்தத்தை ஏற்க முடியது என்று ரஷியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. கைதிகள் பரிமாற்றத்திற்கு மட்டும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments