தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன். சலூன் கடைக்காரர். இவருடைய மனைவி உமா (வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் பரமசிவன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றார். 2 மகன்களும் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர் திடீரென்று உமாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உமாவின் கணவர் பரமசிவன் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோல் வியாபாரியான மணிகுமார் (44) எனது மனைவி உமாவிடம் நட்பாக பழகி வந்தார். பின்னர் உமா, மணிகுமாரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தொடர்ந்து மணிகுமார் தன்னிடம் மீண்டும் பழகுமாறு உமாவிடம் தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருந்தேன். இதனை அறிந்த மணிகுமார் வீடுபுகுந்து உமாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து தலைமறைவான மணிகுமாரை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற தோல் வியாபாரி மணிகுமாரை பாவூர்சத்திரம் போலீசார் சற்று முன் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.