தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்ய வகை செய்யும் 2 சட்ட மசோதாக்களை சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்திருந்தார். அந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது அதில் யாரும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கவில்லை. எனவே அந்த மசோதா ஆய்வின்றி எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதா, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்ட மசோதா உள்பட 18 சட்ட மசோதாக்கள் சட்டபையில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர். மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.