கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும் – தமிழ்நாட்டின் உரிமை & வளர்ச்சிக்காகவும், இச்சிறப்புக்குரிய பொதுக்குழுவில் 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை செயல்படுத்திட, சிறப்பு தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்தார்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை 2 மாதங்களில் பூத் கமிட்டிகள் மூலம் கழக உறுப்பினர்களாக்கிட நம் முதல்-அமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.கல்வியாளர் அணி – மாற்றுத்திறனாளிகள் அணி என கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம். கழகத்தின் கொள்கைகள் – திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம். நம் முதல்-அமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் கழக கூட்டணியை 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம். 2026-இல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார் .