ரஷ்யாவின் பிர்யங்ஸ் மாகாணம் கில்முவ் நகரில் இருந்து தலைநகர் மொஸ்கோவுக்கு சனிக்கிழமை இரவு கடுகதி ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில், பிர்யங்ஸ் மாகாணம் யொஹொனிசி என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த மேம்பாலத்தின் இடிபாடுகள், கொங்கிறீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன. குண்டு வைத்து மேம்பாலம் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த கடுகதி ரயில் இடிபாடுகள், கொங்கிறீட் கற்கள் மீது மோதியது. இதில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேம்பாலம் குண்டு வைத்து தகர்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இது சதிச்செயலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
விபத்து நடந்த பகுதி உக்ரேனுக்கு அருகே உள்ள பகுதியாகும். இதனால், இந்த சம்பவத்தில் உக்ரேன் சதிச்செயல் இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.