வங்காளதேசம் – தென் ஆப்பிரிக்கா வளர்ந்து வரும் வீரர்கள் (எமெர்ஜிங்) அணிகளுக்கு இடையே 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் 2-வது நாளான நேற்று வங்காளதேச பேட்ஸ்மேன் ரிப்பன் மொண்டோல் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ட்செபோ நடுலி களத்தில் மோதிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்டிங் செய்து கொண்டிருந்த வங்காளதேச வீரர் ரிப்பன், நடுலி பந்துவீச்சில் சிக்சர் அடித்தார்.அதன் பிறகு இருவரும் முறைத்துக்கொண்டே இருந்தனர். இதனால் கடுப்பான நடுலி, எதிர்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த ரிப்பன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே இரண்டு வீரர்களும் ஒரு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர், அதன் பிறகு அது ஒரு கை கலப்பாக மாறியது. நடுலி பலமுறை ரிப்பனின் ஹெல்மெட்டை இழுத்தார். நடுவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிப்பன் மொண்டோல், நடுலி பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்துள்ளது.