Thursday, June 12, 2025
spot_img
Homeபொது செய்திகள்தொழிலில் நஷ்டம் 6 வயது மகளுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

தொழிலில் நஷ்டம் 6 வயது மகளுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (38 வயது). இவர் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு ஜஷ்வந்திகா (6 வயது) என்ற மகள் உண்டு. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இவர் ஆன்லைன் வர்த்தக தொழிலில், முதலீடு செய்வதற்காக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மகள் ஜஸ்வந்திகாவிடம் வெளியே சென்று விட்டு வருவோம் எனக்கூறி லோகநாதன் புட்லூர் ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு இருவரும் ரெயில் நிலையத்தில் வெகுநேரம் அமர்ந்துள்ளனர். அப்போது இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் மகள் ஜஸ்வந்திகாவுடன் லோகநாதன் திடீரென பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரவு வெகு நேரமாகியும் கணவனும், மகளும் வீட்டிற்கு வராததால் லோகநாதனின் மனைவி வாணி புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில்தான் புட்லூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து 6 வயது மகளுடன் கணவர் லோகநாதன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வாணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வாணி சம்பவ இடத்துக்கு சென்று அவரது கணவர் மற்றும் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய லோகநாதன் யார்-யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார்? யாரேனும் கடன் கேட்டு அவரை மிரட்டினரா? என்று அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments