Friday, June 13, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்அபார பந்துவீச்சு.. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி

அபார பந்துவீச்சு.. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் முதலாவதாக ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் ஆயூஷ் மாத்ரே, குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த சூழலில் ஆயூஷ் மாத்ரே 34 (17) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய உர்வில் பட்டேலும் அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷிவம் துபே 17 (8) ரன்களில் கேட்ச் ஆனார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 52 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிராவிசுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்து மிரட்டிய இந்த ஜோடியில் பிராவிஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். கடைசி ஓவரில் பிராவிஸ் 57 (23) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முடிவில் ஜடேஜா 21 (18) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் சுப்மன் கில் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 5 ரன்களும், ரூதர் போர்டு (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஷாருக்கான் 19 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த சாய் சுதர்ஷன் 41 (28) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஷித் கான் 12 ரன்களும், கோட்சி 5 ரன்களும், ராகுல் தெவாட்டியா 14 ரன்களும், அர்ஷத் கான் 20 ரன்களும், சாய் கிஷோர் 3 ரன்னும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் முகமது சிராஜ் 3 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி 10 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி கடைசி இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும்.

இன்றைய போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றியோடு சென்னை அணி ஐ.பி.எல்.தொடரை நிறைவு செய்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments