Saturday, June 14, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்நிதிஆயோக் கூட்டம் நிறைவு: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நிதிஆயோக் கூட்டம் நிறைவு: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நிதிஆயோக் கூட்டத்தில், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்-மந்திரிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அதேபோன்று, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநில முதல்-மந்திரிகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வந்த நிதிஆயோக் கூட்டம் நிறைவடைந்தது. முன்னதாக, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு அடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்தார். மேலும், முதல் வரிசையில் இடதுபுறமாக பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு அடுத்து ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இடம்பிடித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பிரதமருடனான இந்த சந்திப்பின்போது, பள்ளி கல்வித்துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும், இந்த துறை சார்ந்த, தமிழகத்திற்கான நிதியை தருவது பற்றி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு நிதி விடுவிப்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக மத்திய அரசு தர வேண்டிய நிதியை விடுவிக்க இக்கூட்டத்தின் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையில், “மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தர வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை. தற்போது 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments