Sunday, June 15, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில் பொருளாதார வழித்தடம் அவசியம்; தரைவழி தொடர்பு முக்கியம் -...

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில் பொருளாதார வழித்தடம் அவசியம்; தரைவழி தொடர்பு முக்கியம் – ரணில்

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொண்டு நாங்கள் இந்த நன்மையை அடையப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

பார்த் பைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த ஐந்தாவது வங்காள விரிகுடா மாநாடு நேற்று (20) கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிந்தனை குழாம் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,

வங்காள விரிகுடா தொடர்பான மாநாடு மிகவும் தீர்க்கமான கட்டத்தில் நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கு தீர்வை வரிகளை விதித்திருக்கின்றார். உலகமயமாதல் செயல்பாடு மாற்றமடையாது. ஆனால் அது தொடர்பான முறையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்யப்போகிறோம்? நாம் ஒரு பிராந்திய அமைப்பாக முன்வரப் போகின்றோமா?

அப்படியானால் எந்த அமைப்பு இதற்கு தலைமை தாங்கும்? பீம்ஸ்டெக் அல்லது பட்டுப்பாதை (BRI) அல்லது ஆசியான் அமைப்பு இவற்றில் எது இந்த மாற்றத்தை நோக்கி நகர்வதில் தலைமைத்தும் வகிக்கப்போகிறது? நாம் ஒரு பிராந்தியமாக செயல்படுவதா? போன்று கேள்விகள் எம்முன் எழுகின்றன.

அமெரிக்கா ஜனாதிபதி இந்த தீர்வை வரிகளை விதித்தவுடன் இந்தியா ஜப்பான் சீனா கொரியா போன்ற நாடுகள் அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தின.

இந்நிலையில் எமது இந்த வங்காள விரிகுடா நாடுகள் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகின்றன? எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா 30 ட்ரில்லியன் டொலர்களுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க போகிறது. இந்தோனேசியா நான்காவது பொருளாதாரமாக உருவெடுக்கும்.

பங்களாதேஷ் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் முதல் 30 நாடுகளுக்குள்ளே வந்துவிடும். இந்த இடத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வாறு இந்த அபிவிருத்தியை நாம் பயன்படுத்த போகிறோம் என்பது எமன் இருக்கின்ற கேள்வியாகும். இதில் இந்த பீம்ஸ்டேக் அமைப்பு அல்லது வங்காள விரிகுடா நாடுகள் என்ன செய்யப் போகின்றன? நாம் ஒரு பிராந்தியமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தற்போது நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றன. பொருளாதார வழித்தடங்கள் அவசியமாகின்றன. சீனா – சிங்கப்பூருக்கு இடையில் தொடர்பு காணப்படுகிறது.

சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையில் ரயில் பாதை தொடர்பு காணப்படுகிறது. இந்தியா மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ரயில்வே துறையுடன் ஒரு பொருளாதார வழித்தடம் காணப்படுகிறது.

இந்நிலையில் நாம் எவ்வாறு எமது தொடர்புகளை வலுப்படுத்த போகிறோம் என்பது முக்கியமாக இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் தெலுங்கானா ஆந்திரா தமிழ்நாடு இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் அவசியமாகின்றது. அதன் ஊடாகவே நாம் எமது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

மேலும் இலங்கை தற்போது மிக முக்கியமாக ஆடை துறையில் தங்கியிருக்கிறது. அதிலிருந்து நாங்கள் வெளியே வர வேண்டும்.

இலங்கை பிராந்திய ரீதியான வர்த்தகங்களை செய்கின்ற ஒரு தளமாக மாற்றமடைய வேண்டும். இதற்கு நாங்கள் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று புதிய துறைமுகத்தை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும்.

எமது பொருளாதார ஐந்து முதல் பத்து வீத வளர்ச்சி அடைய வேண்டுமானால் வருகின்ற கொள்கலன்களை எங்கே நாம் தரையிறக்குவது? அதற்கான வசதிகள் எம்மிடம் இருக்கின்றதா?

இலங்கை இந்திய தரை தொடர்பு தொடர்பாக நாம் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்திருக்கிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு இடையிலான பாலம் உருவாக வேண்டும். அதற்கு முன்னர் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் மற்றும் சுற்றாடல் ரீதியான விடயங்கள் ஆராயப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டி இருக்கின்றது. புதிய வர்த்தக தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments