10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட ஐ.பி.எல். தொடர் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
முதலில் வெளியிட்ட ஐ.பி.எல். அட்டவணைப்படி பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் ஐ.பி.எல். நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணையை வெளியிட்டது.
அந்த அட்டவணையில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், நடப்பு தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 2வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் முதல் தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.