சுவீடன் நாட்டுக்கான அடுத்த இந்திய தூதராக அனுராக் பூஷணை நியமனம் செய்து மத்திய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி அந்த அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக 1995-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பூஷண், அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக தற்போது பணியில் இருந்து வருகிறார்.
அவர் சுவீடன் நாட்டின் இந்தியாவுக்கான அடுத்த தூதராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியை விரைவில் அவர் ஏற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி சுவீடனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், இரு நாடுகளும் நீண்டகால நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளன. பொது மதிப்புகள், வலிமையான வர்த்தகம், முதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொடர்புகளை அவை கொண்டுள்ளதுடன், அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஒரே வகையான அணுகுமுறைகளை கொண்டுள்ளன என்று தெரிவித்து உள்ளது.