ஊழல் முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் தேசிய தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளில் ஒன்றாகவே உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு வடக்கு தொகுதியின் கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுவதாக காயத்ரி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது குறித்து காயத்ரி விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இலங்கை முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றமே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவை நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டுவந்தது.
முன்னைய ஆட்சிகளின் கீழ் தலைவிரித்தாடிய ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப அரசியல் ஆதிக்கம், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இன, மத, பிரதேச வேறுபாடுகள் கடந்து கிளர்ந்தெழுந்த மக்கள் பழைய பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கங்களை நிராகரித்து முறைமை மாற்றத்துக்காக பதவிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலுப்படுத்த வேண்டியது நாட்டினதும் எதிர்காலச் சந்ததிகளினதும் நல்வாழ்வில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும்.
பார்ளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற போதிலும், அதிகார அகங்காரம் இல்லாமல் நாட்டின் நலன்களை மாத்திரமே மனதிற்கொண்டு செயற்படுகின்ற ஜனாதிபதி திசாநாயக்கவின் முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வலுப்படுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் பயணத்தில் இணைந்து கொண்டு நான் உள்ளூராட்சி தேர்தல்களில் கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடுகிறேன்.
இனவாதமும் மதத்தீவிரவாதமும் இனிமேல் நாட்டில் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துக்கொண்டு சகல இனங்களையும் சேர்ந்த மக்களையும் அரவணைக்கும் முற்போக்கான கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுமுகமாக ஆட்சி செய்வதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்ற அதிகாரம் எல்லாம் தேசிய மக்கள் சக்தி வசமே இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புக்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் நிருவாகங்களும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால் சுமுகமான ஆட்சிமுறையை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். அதனால் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கி அதிகப்பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றுவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
முன்னர் நான் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக இருந்து மக்கள் நல்வாழ்வுக்காக ஆற்றிய நற்பணிகளை பொதுவில் கொழும்பு வடக்கு மக்களும் குறிப்பாக கொட்டாஞ்சேனை மக்களும் நன்கு அறிவார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஊடாக எனது பணிகளை மேலும் ஊக்கத்துடன் முன்னெடுப்பேன் என்பதை கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார மக்களுக்கு உறுதிளிக்கிறேன்.
ஊழலும் துஷனபிரயோகமும் இல்லாத ஆட்சிமுறையை முன்னெடுக்கும் ஜனாதிபதி தலையையிலான அரசாங்கத்தின் கீழ் மேலும் சிறப்பான பணிகளை உள்ளூராட்சாகளினால் செய்யமுடியும் என்பது நிச்சயமானது.
அதனால் என்னை மீண்டும் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக பெரும்பான்மை வாக்குகளினால் தெரிவுசெய்து மக்கள் பணியைத் தொடர ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு வாக்காளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.