அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்காள தேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனையடுத்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. இந்தநிலையில், சீனா மீது கூடுதலாக 50 விழுக்காடு வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா விதித்த 34 விழுக்காடு பதிலடி வரியை திரும்பப் பெறாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு சீனா பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக சீன வர்த்தக அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “சீனாவுக்கு எதிராக கூடுதலாக வரி விதிப்பதாக அமெரிக்கா மிரட்டல் விடுப்பதன் மூலம், அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்கிறது. அது, அமெரிக்காவின் ‘பிளாக்மெயில்’ குணத்தை காட்டுகிறது. அமெரிக்காவின் பிளாக்மெயிலை சீனா ஏற்றுக்கொள்ளாது. டிரம்ப் வர்த்தக போரை தொடர்ந்தால், சீனா இறுதிவரை எதிர்த்து போராடும். தனது நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.