ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், ஒரு நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் டாக்டர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதிகாரிகளின் தகவல்களின்படி, டாக்டர் கெய் அரகாவா (34), நோயாளி மிட்சுகி மோட்டோஷி (86) மற்றும் அவரது பராமரிப்பாளர் கசுயோஷி மோட்டோஷி (68) ஆகியோரின் உடல்கள் ஜப்பான் விமான தற்காப்புப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கூறினர்.
ஜப்பானின் புகழ்பெற்ற “டாக்டர் ஹெலிகாப்டர்” திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம் அவசரமாக சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளை தேவையான சிகிச்சைகளை வழங்கக்கூடிய மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு செல்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தத் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது இருப்பினும், இதுபோன்ற ஒரு சில விபத்துகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.