மருங்கூர் அருகே இரவிபுதுரை சேர்ந்தவர் தாணுமாலய பெருமாள். இவருடைய மனைவி நாகம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் (வயது 38) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் டெம்போ டிரைவரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்தது. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மணிகண்டன் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் மணிகண்டனின் தாயார் வெளியே வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் நாகம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகனின் படுக்கை அறை கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தொிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.