Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது அதானி நிறுவனம்

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது அதானி நிறுவனம்

இந்திய கோடீஸ்வரர் கவுதம் அதானியின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்து தொடங்குவதாக இருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் (காற்றாலை திட்டம்) இருந்து விலகி உள்ளது.

இதுதொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை திட்டம் மற்றும் இரண்டு மின்சார பரிமாற்றத் திட்டங்களில் ஈடுபடுவதிலிருந்து மரியாதையுடன் விலகிக்கொள்கிறோம். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் இணைந்து பணியாற்ற உறுதி அளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, அதை பயனர்களுக்கு எடுத்துச் செல்ல மின்சார லைன்களை அமைப்பது என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மொத்தம் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருந்தது.

ஆனால், இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக தலைமையில் அமைந்த புதிய அரசு மின்சார செலவுகளைக் குறைக்க விரும்பியது. இதற்காக அதானி குழுமத்தின் திட்டங்களை இலங்கை மறுபரிசீலனை செய்ய தொடங்கியது. மின் திட்டச்செலவை குறைக்க, அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அறிவித்திருந்தது. இவ்வாறு அடுத்தடுத்து சிக்கல் எழுந்த நிலையில், இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில் 700 மில்லியன் டாலர் முதலீட்டில் முனையம் கட்டும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments