மெக்சிகோவில் கொலை செய்யப்பட்ட 21 வயதான ஸ்பெயின் மாணவி கிளாடியா டகோரொன்டேயின் உடலை அடையாளம் காண அவரது தந்தை வாலென்டின் டகோரொன்டே மெக்சிகோவின் மொரேலோஸ் மாநிலத்திற்கு சென்றுள்ளார். கிளாடியாவின் உடல் வெள்ளிக்கிழமை அவரது தந்தையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மொரேலோஸ் மாநில சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் கிரனாடா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த கிளாடியா, மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் மொரேலோஸ் மாநிலத்தின் தன்னாட்சி பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். செப்டம்பர் 12ஆம் திகதி குவாட்ட்லா நகரில் உள்ள கலாசார நிலையத்திற்கு அருகே அவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது கையடக்கத் தொலைபேசியை பறிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பில் பிரான்சிஸ்கோ ஜேவியர் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு பெண்ணுக்கு எதிரான பாலின அடிப்படையிலான கொலையாக விசாரிக்கப்படுவதாக மொரேலோஸ் மாநில சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாடியாவின் கொலை மெக்சிகோ மற்றும் ஸ்பெயினில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மொரேலோஸ் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் பல பெண் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாணவர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சகம் மொரேலோஸ் மாநிலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


