கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது கருத்துகளுக்குப் பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த நிரந்தரக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு இருதரப்பும் தயாராகிவிட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (18) அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆர்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவக் கட்டமைப்புகள் நிறுவப்படுவதைத் தடுக்க முடியும் எனவும், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் மற்றும் அதில் குறிப்பிடப்படும் நிபந்தனைகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதுபற்றி, ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்து தேவைகளின் மீதான கட்டுப்பாட்டை முழுவதுமாக அமெரிக்காவிடம் வழங்கும் வகையிலான ஒப்பந்தம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் இணைந்து அமெரிக்க அரசு மேற்கொள்வதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், இதுவொரு முடிவிலா ஒப்பந்தம்; இதற்கு முடிவே இல்லை எனவும் கூறிய ட்ரம்ப் விரைவில் அங்கு அமெரிக்கா அதன் இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


