உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த ரிட் மனு நேற்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை இன்று மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதியும் இன்று அறிவிக்கப்படவுள்ளது.


