நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பொதுமக்கள் இன்னும் இவ்வாறான மோசடிகளில் சிக்கி வருவதாக தெரிவித்தார்.
மோசடிகாரர்கள் குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு வைத்து, பொலிஸ் அதிகாரிகள் அல்லது அரச அதிகாரிகள் போன்று நடித்து தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அல்லது அரச அதிகாரிகள் ஒருபோதும் தனிப்பட்ட தரவுகள், வங்கி விபரங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் அல்லது OTP இலக்கங்களை கோரமாட்டார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், இணைய இணைப்புகள் மற்றும் அடையாளம் தெரியாத கணக்குகளுக்கு பணம் அனுப்புவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இணையவழி நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 0112 300756, 0112 320141 முதல் 145 வரையான தொலைபேசி இலக்கங்கள் அல்லது diir.cid@police.lkமின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


