பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய பொலிஸார் மீட்டிருந்தனர்.
உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணராக பணிபுரிந்த ஷிமயா தர்ஷனி என்ற 34 வயதுடைய பெண் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
அவரது காதலன் எனக் கூறப்படும் நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் பிள்ளையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இவர்களிடம் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன்போதே, பிரதான சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லூரியின் பொறுப்பதிகாரி உதவியுள்ளமை தெரியவந்தது.
பிரதேச சபை ஊழியர் மூலமாகவே பிரதான சந்தேகநபருக்கு இந்த பொலிஸ் அதிகாரி அறிமுகமாகியுள்ளார். கொலை நடந்த மறுநாள் (ஏப்ரல் 17) காலை, பிரதான சந்தேகநபரும் பிரதேச சபை ஊழியரும் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லூரிக்கு முன்னால் இந்த அதிகாரியைச் சந்தித்துள்ளனர்.
அப்போது பிரதேச சபை ஊழியர், “சார், இவர் என் நண்பர். இவரிடம் ஒரு சடலம் இருக்கிறது. அது இவர் பழகிய பெண்ணின் சடலம். இதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்” எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த பொலிஸ் அதிகாரி, “ஏதாவது ஒரு வைத்தியசாலைக்கு அருகில் கொண்டு போய் போட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன்படியே, அவர்கள் சடலத்தை தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.
பின்னர் அவர்கள் திகன பகுதிக்கு சென்றுள்ள நிலையில், அங்கு பொலிஸ் ஜீப் வண்டியில் வந்த குறித்த அதிகாரி, “நான் சட்டத்தரணி ஒருவரைப் பார்த்துத் தருகிறேன், பயப்படாமல் மறைந்திருங்கள்” எனக் கூறியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி காலை, மீண்டும் அந்த அதிகாரியைச் சந்தித்தபோது, “பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என்று வரும் வரை மறைந்திருங்கள்” என்று கூறியுள்ளார்.
அத்துடன் நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த அதிகாரி, மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பின்னர் அந்த பொலிஸ் அதிகாரி பிரதான சந்தேகநபரிடம் 10,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு, பிரதேச சபை ஊழியருடன் சென்று மதுபானம் வாங்கியுள்ளார்.
மது அருந்திய பின்னர், எஞ்சிய பணத்தில் தனது தேவைக்காக பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து தயிர் மற்றும் தேன் பாட்டில் ஒன்றையும் வாங்கியுள்ளார். அத்துடன், “உனக்காக முன்னிலையாகவிருந்த சட்டத்தரணிதான் பிரேத பரிசோதனையின் போது தற்காலிக நீதவானாக இருந்தார். பயப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன். என் மனைவிக்கு நரம்பு நோய் உள்ளது, அதற்கும் உதவுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதான சந்தேகநபர், கைது செய்யப்படுவதற்கு 7 நாட்களுக்குள் மூன்று முறை யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார். மூன்றாவது முறையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது பிரதான சந்தேகநபர், தான் அறைக்குச் சென்றபோது அந்தப் பெண் ஜன்னல் திரைச்சீலை தொங்கவிடும் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
எனினும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜன்னல் திரைச்சீலை கம்பி மனித உடலின் எடையைத் தாங்கும் அளவுக்கு வலுவானது அல்ல என்பதால், விசாரணையைத் திசைதிருப்ப சந்தேகநபர் பொய் கூறுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, மரணத்தை மறைத்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பிள்ளையை தாயின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் வழிகாட்டலில், நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன.


